09/01/2026
தானத்தில் சிறந்தது அன்னதானம் எப்படி கொடுக்க வேண்டும்?
நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. தானம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்திக்கு ஏற்ப தானங்களை செய்யலாம். நாம் பலனை எதிர்பார்த்து தானம் செய்வதால் எந்த பலனும் இல்லை. நாம் மனதார எந்த தானத்தை செய்தாலும் கஷ்டங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும்.
பொதுவாக தானங்களில் பல வகை உண்டு. தானத்திலேயே சிறந்த தானமாக சொல்லப்படுவது அன்னதானம். எத்தனையோ கோவில்கள் ஏறி இறங்கினாலும் பசியால் வாடும் பலருக்கு உணவிடுவதே பலரின் பாவங்கள் தீர்க்கிறது என்பதே உண்மை.
அன்னதானத்தின் மகத்துவம்:
அன்னதானம் என்பது இல்லாதவர்களுக்கும், உணவற்ற ஏழைகளுக்கும் பசிக்கு உணவளிப்பதே அன்னதானம் ஆகும். பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசி வந்தால் ஒருவன் தன்னிலை இழப்பான். எனவே, நாம் வழங்கும் அன்னதானம் அவர்களின் பசியை போக்குவதுடன் நமக்கு ஆசிர்வாதமும், புண்ணியமும் கிடைக்கும்.
மனிதர்களுக்கு எவ்வளவு காசு பணம் இருந்தாலும் எதிலும் முழுமையாக திருப்தியடைய மாட்டார்கள். மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்தவைக்கு ஏங்கும். ஒரு மனிதனுக்கு, போதும் என்ற மனப்பான்மையை அளிப்பது அன்னதானம் மட்டுமே... பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது.
பெரிய அளவில் காசு பணம் போட்டுச் செய்வது மட்டுமல்ல அன்னதானம். தண்ணீர் இல்லாமல் தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு சொம்பு தண்ணீர் கொடுப்பதும் அன்னதானமே. பிரதிபலனை எதிர்பார்க்காமல் நாம் செய்யக்கூடிய அன்னதானம் ஆனது நமக்கு மட்டும் புண்ணியத்தை சேர்ப்பது கிடையாது. நமக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கும் அது புண்ணியத்தை சேர்க்கும்.
வாயில்லா ஜீவன்களுக்கும் அன்னதானம்:
மனிதர்களுக்கு நாம் எப்படி அன்னதானம் செய்கின்றோமோ, அதேபோல வாயில்லா ஜீவன்களுக்கும் அன்னதானம் செய்வது நல்லது. நாம் சாப்பிட்ட பின் மீதம் வைக்கும் ஒரு கைப்பிடி உணவை வாயில்லா ஜீவன்கள் உண்டாலும் அது அன்னதானத்தில் சேரும்.
வாயில்லா ஜீவன்களுக்கு நாம் செய்யக்கூடிய அன்னதானம், விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மை காக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
குறிப்பாக, காக்கை குருவிகளுக்கும், பசுக்களுக்கும் உணவளிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும்.
அன்னதானத்துடன் தண்ணீர் முக்கியம்:
அன்னதானம் செய்யும்போதும் தண்ணீருடன் செய்தால் மட்டுமே அது முழுமையடையும்.
காக்கை குருவிகளுக்கு இறை வைக்கும்போதும் தண்ணீர் வைக்க வேண்டும்.
சாஸ்திரத்தின் நோக்கம்:
மனிதர்கள் எதையுமே நேரடியாகச் சொன்னால் செய்ய மாட்டார்கள். எல்லாவற்றையும் சாஸ்திர சம்பிரதாயங்கள் ஆக சொல்லும்போதுதான் அவர்களுடைய மனதில் நல்ல விஷயங்கள் ஆழமாகப் பதிகின்றது. அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் பாவக் கணக்கு, புண்ணியக் கணக்கு என்று கூறியுள்ளனர்.
அன்னதானம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
அன்னதானம் செய்வதன் மூலம் முன் ஜென்ம கர்ம வினைகள் மற்றும் இப்பிறவியில் செய்த பாவங்கள் விலகும்.
இது தானங்களில் உயர்ந்ததாகக் கருதப்படுவதால், அளவற்ற புண்ணியத்தை சேர்க்கும்.
அன்னதானம் செய்வதால் தரித்திரம் விலகி, செல்வம் பெருகும்.
பிறருக்கு உணவளிக்கும்போது ஏற்படும் மனநிறைவு நிலையான மகிழ்ச்சியைத் தரும்.
அன்னதானம் செய்பவர்களின் வாழ்க்கையில் பசிப்பிணி வராது.
இறைவனின் பரிபூரண அருளும் கிடைக்கப்பெறும்.
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
Aanmeega Kalanjiyam