17/04/2026
செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டும் என விரும்புவோர்
அல்கமா பின் வக்காஸ் அவர்கள் கூறியதாவது:
(மதீனா ஆளுநர்) மர்வான் பின் ஹகம், தம் காவலரிடம் “ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று தாம் செய்தவற்றைக் குறித்து மகிழ்ந்து, தாம் செய்யாதவற்றுக்குப் புகழப்பட வேண்டும் என விரும்புகின்ற மனிதர் ஒவ்வொருவரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட வேண்டிவருமே!’ என்று (நான் வினவியதாகக்) கேள்!” என்று சொன்னார். அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்ட போது, “உங்களுக்கு இதுதொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்ததற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் காட்டிக் கொண்டார்கள். தங்களுக்கு (இறைவன் மூலம்) வழங்கப் பெற்ற (உண்மை)தனைத் தாங்கள் மறைத்து விட்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்” என்று கூறிவிட்டு இந்த வசனங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதினார்கள்: “நீங்கள் வேதத்தை மக்களுக்கு விளக்க வேண்டும்; அதை மறைக்கக் கூடாது” என்று வேதம் வழங்கப்பட்டோரிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தபோது அதனை தமது முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தனர். அதற்காக அற்ப விலையைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். தாம் செய்தவற்றைக் குறித்து மகிழ்ந்து, தாம் செய்யாதவற்றுக்குப் புகழப்பட வேண்டும் என விரும்புவோரைத் தண்டனையிலிருந்து தப்பிக்குமிடத்தில் இருக்கிறார்கள் என எண்ணாதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” (3:187, 188)
அறிவிப்பவர்: அல்கமா (ரலி), நூல்கள்: புகாரி (4568), முஸ்லிம் (5360)
3:188வது வசனம் நயவஞ்சகர்கள் தொடர்பாக அருளப்பட்டது என்று பின்வரும் செய்தி குறிப்பிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், நபியவர்கள் புனிதப் போருக்குப் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கி விடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்)செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள் அப்போதுதான் “தாம் செய்தவற்றைக் குறித்து மகிழ்ந்து, தாம் செய்யாதவற்றுக்குப் புகழப்பட வேண்டும் என விரும்புவோரைத் தண்டனையிலிருந்து தப்பிக்குமிடத்தில் இருக்கிறார்கள் என எண்ணாதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” எனும் (3:188) இறைவசனம் அருளப்பட்டது.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்கள்: புகாரி (4567), முஸ்லிம் (5359)