சத்திய முழக்கம்

சத்திய முழக்கம் TNTJ social media

17/04/2026

செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டும் என விரும்புவோர்

அல்கமா பின் வக்காஸ் அவர்கள் கூறியதாவது:
(மதீனா ஆளுநர்) மர்வான் பின் ஹகம், தம் காவலரிடம் “ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று தாம் செய்தவற்றைக் குறித்து மகிழ்ந்து, தாம் செய்யாதவற்றுக்குப் புகழப்பட வேண்டும் என விரும்புகின்ற மனிதர் ஒவ்வொருவரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின் நாம் அனைவருமே வேதனை செய்யப்பட வேண்டிவருமே!’ என்று (நான் வினவியதாகக்) கேள்!” என்று சொன்னார். அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்ட போது, “உங்களுக்கு இதுதொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? (இதன் உண்மை என்னவென்றால்,) நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதனை மறைத்துவிட்டு (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபியவர்களிடம் தெரிவித்தார்கள். தங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வினவியது தொடர்பாகத் தாங்கள் அன்னாரிடம் தெரிவித்ததற்காகப் பாராட்டை எதிர்பார்ப்பது போல் காட்டிக் கொண்டார்கள். தங்களுக்கு (இறைவன் மூலம்) வழங்கப் பெற்ற (உண்மை)தனைத் தாங்கள் மறைத்து விட்டது குறித்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்” என்று கூறிவிட்டு இந்த வசனங்களை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதினார்கள்: “நீங்கள் வேதத்தை மக்களுக்கு விளக்க வேண்டும்; அதை மறைக்கக் கூடாது” என்று வேதம் வழங்கப்பட்டோரிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்தபோது அதனை தமது முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தனர். அதற்காக அற்ப விலையைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். தாம் செய்தவற்றைக் குறித்து மகிழ்ந்து, தாம் செய்யாதவற்றுக்குப் புகழப்பட வேண்டும் என விரும்புவோரைத் தண்டனையிலிருந்து தப்பிக்குமிடத்தில் இருக்கிறார்கள் என எண்ணாதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” (3:187, 188)

அறிவிப்பவர்: அல்கமா (ரலி), நூல்கள்: புகாரி (4568), முஸ்லிம் (5360)

3:188வது வசனம் நயவஞ்சகர்கள் தொடர்பாக அருளப்பட்டது என்று பின்வரும் செய்தி குறிப்பிடுகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நயவஞ்சகர்கள் சிலர், நபியவர்கள் புனிதப் போருக்குப் புறப்பட்டுச் சென்றால், அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கி விடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தாம் தங்கிவிட்டதைப் பற்றி மகிழ்ச்சியும் அடைவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பி வரும்போது அவர்களிடம் (போய், தாம் கலந்து கொள்ளாமல் போனதற்குப் பொய்யான) சாக்குப் போக்குகளைக் கூறி, (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்)செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள் அப்போதுதான் “தாம் செய்தவற்றைக் குறித்து மகிழ்ந்து, தாம் செய்யாதவற்றுக்குப் புகழப்பட வேண்டும் என விரும்புவோரைத் தண்டனையிலிருந்து தப்பிக்குமிடத்தில் இருக்கிறார்கள் என எண்ணாதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு” எனும் (3:188) இறைவசனம் அருளப்பட்டது.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
நூல்கள்: புகாரி (4567), முஸ்லிம் (5359)

17/04/2026

இணைவைப்பவர்களால் ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல்

உங்களின் செல்வங்களிலும் உயிர்களிலும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்பு வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகளவு புண்படுத்தும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் நடந்தால் அதுவே உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (3:186)
7வது குறிப்பைக் காண்க!

17/04/2026

நரகத்திலிருந்து தூரமாக்கப்பட்டு சொர்க்கத்தில் நுழைவதற்கான வழி

நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டுச் சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுபவர் வெற்றி பெற்று விட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் இன்பத்தைத் தவிர வேறில்லை. (3:185)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். நீங்கள் விரும்பினால் “நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டுச் சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுபவர் வெற்றி பெற்று விட்டார்” என்ற (3:185) வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: திர்மிதீ (2939), தாரிமீ (2699)

“நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டுச் சொர்க்கத்தில் நுழைவிக்கப்பட யார் விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வின்மீதும், மறுமை நாளின்மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் நிலையிலேயே இறப்பு அவரைத் தழுவட்டும். தமக்கு எது கிடைக்க வேண்டும் என்று விரும்புவாரோ அதையே மக்களுக்கும் அவர் விரும்பட்டும். ஓர் ஆட்சித் தலைவருக்கு வாக்குறுதிப் பிரமாணம் (பைஅத்) அளித்தவர், அவருடன் தமது கரத்தை இணைப்பதுடன் உளப்பூர்வமான ஆதரவையும் அவருக்கு வழங்கட்டும்; தம்மால் இயன்றவரை அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கட்டும். அவரு(டைய ஆட்சி)க்கெதிராக அவருடன் சண்டையிடுவதற்காக மற்றொருவர் வந்தால் அவருடைய கழுத்தை வெட்டி விடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: முஸ்லிம் (3759)

17/04/2026

கஞ்சத்தனம் செய்வோருக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்குரிய ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக் கொண்டு, நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்’ என்று சொல்லும் எனக் கூறிவிட்டுப் பிறகு, “தனது அருளிலிருந்து அல்லாஹ் வழங்கியதில் யார் கஞ்சத்தனம் செய்கிறாரோ, அவர் அது தமக்கு நல்லது என நினைக்க வேண்டாம். மாறாக அவர்களுக்கு அது கெட்டதாகும். அவர்கள் எதைக் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன்மூலம் மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்” எனும் (3:180) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்கள்: புகாரி (1403), நஸாயீ (2436), அஹ்மத் (8307)

03/04/2026

துன்பம் ஏற்பட்ட பிறகும் தூதருக்குப் பதிலளித்தோர்

உஹுதுப் போரிலிருந்த இணைவைப்பவர்கள் திரும்பி ரவ்ஹா என்ற இடத்தை அடைந்த போது, “நீங்கள் முஹம்மதைக் கொல்லாமலும், அவர்களின் கன்னிப் பெண்களைக் கொண்டுவராமலும் திரும்பி வந்துள்ளீர்கள். நீங்கள் நடந்து கொண்டது மிக மோசமானது. திரும்பிச் செல்லுங்கள்” என்று சொன்னார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தபோது மக்களும் தயாரானார்கள். ஹம்ராவுல் அஸத் அல்லது பிஃரு அபீ இனபா என்ற இடத்தை அடைந்தபோது “(போரில்) அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட பிறகும் அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நன்மை செய்து, இறையச்சத்துடன் நடப்போருக்கு மகத்தான கூலி உண்டு” என்ற (3:172) வசனம் இறங்கியது.
அபூ சுஃப்யான் முஹம்மத் (ஸல்) அவர்களிடம், “நீங்கள் எங்கள் தோழர்களைக் கொன்ற “பத்ர்” களமே உங்களுக்குக் குறிக்கப்பட்ட இடமாகும்” என்று கூறினார். இதனால் கோழைகள் திரும்பிச் சென்றனர். ஆனால் வீரர்கள் போர் செய்வதற்கும், வியாபாரத்திற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். அங்கு(ச் சென்றடைந்ததும் எதிரிகளில்) எந்த ஒருவரையும் அவர்கள் காணவில்லை. எனவே அங்குப் பொருட்களை விற்கவும், வாங்கவும் செய்தனர். அப்போதுதான் அல்லாஹ், “அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல், அல்லாஹ்விடமிருந்து பெற்ற அருளுடனும் சிறப்புடனும் திரும்பினர். அவர்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றினார்கள். அல்லாஹ் மகத்தான அருளுடையவன்” (3:174) என்ற வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: நஸாயீ - குப்ரா (11017), தப்ரானீ - கபீர் (11467)
(இறைத் தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் தீயில் தூக்கி எறியப்பட்டபோது “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக்கொள்வோரில் சிறந்தவன்” என்று கூறினார்கள். இதே வார்த்தைகளை முஹம்மத் (ஸல்) அவர்கள், “மக்கள் உங்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு விட்டனர். எனவே அவர்களைப் பயந்து கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சிலர் கூறியபோது சொன்னார்கள். “இது அவர்களுக்கு இறைநம்பிக்கையை அதிகரித்தது. “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் பதிலளித்தனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (4563)

(போரில்) அவர்களுக்குத் துன்பம் ஏற்பட்ட பிறகும் அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நன்மை செய்து, இறையச்சத்துடன் நடப்போருக்கு மகத்தான கூலி உண்டு” என்ற (3:172) வசனத்தை (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள் ஓதிவிட்டு என்னிடம், “என் சகோதரி மகனே! உன் தந்தை ஸுபைர் (ரலி) அவர்களும், (என் தந்தையும் உன் பாட்டனாருமான) அபூபக்ர் (ரலி) அவர்களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் உள்ளவர்கள்தாம். உஹுத் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டபோது இணை வைப்பவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்களோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) “அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்? என்று கேட்டார்கள். (உஹுதில் கலந்து கொண்ட) நபித் தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன்வந்தனர்” என்று கூறினார்கள். அவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்களும், ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களும் இருந்தனர்.

அறிவிப்பவர்: உர்வா, நூல்கள்: புகாரி (4077), முஸ்லிம் (4797)

03/04/2026

உயிர்த்தியாகிகள் உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள்

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தோர் என்று கருதாதீர்கள்! மாறாக தமது இறைவனிடம் அவர்கள் உயிருடன் இருக்கின்றனர்; உணவளிக்கப்படுகின்றனர்” (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒருமுறை தோன்றி, “நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள், “நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!” என்று கூறுவர்.
இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும்போது, “இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒருமுறை கொல்லப்பட வேண்டும்” என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும்போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்கள்: முஸ்லிம் (3834), திர்மிதீ (2937), இப்னுமாஜா(2791).

03/04/2026

மோசடி செய்பவனின் மறுமை நிலை

மோசடி செய்வது எந்த நபிக்கும் தகுதியானதல்ல! மோசடி செய்தவன், தான் செய்த மோசடியுடன் மறுமை நாளில் வருவான். பிறகு ஒவ்வொருவருக்கும் அவர் சம்பாதித்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (3:161)
நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, “மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து கொண்டு வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது, ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது, ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (3073), முஸ்லிம் (3737)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்” என்று கூறியதை நான் கேட்டேன்.
அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது- “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவர், “தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும், அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக் கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் அமீரா (ரலி),
நூல்கள்: முஸ்லிம் (3743), அபூதாவுத் (3110), அஹ்மத் (17056)

03/04/2026

உஹுதுப் போரில் ஏற்பட்ட சிறுதூக்கம்

இத்துயரத்திற்குப் பிறகு உங்களுக்கு நிம்மதியைக் கொடுக்கும் சிறு தூக்கத்தை வழங்கினான். அது உங்களில் ஒரு பிரிவினரைத் தழுவியது. (3:154)
உஹுதுப் போரின்போது சிற்றுறக்கம் ஆட்கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எந்த அளவுக்கென்றால் எனது வாள் எனது கையிலிருந்து பலமுறை (நழுவி) விழுந்து விட்டது. அது விழ, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, அப்போதும் நான் அதை எடுப்பேன்.

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி),
நூல்கள்: புகாரி (4068), திர்மிதீ (2924), அஹ்மத் (15764)

உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன்.அல் குர்ஆன் 7:153
19/03/2026

உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரிலா அன்பாளன்.

அல் குர்ஆன் 7:153

எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக!அல் குர்ஆன் 2:127
19/03/2026

எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக!

அல் குர்ஆன் 2:127

எங்கள் இறைவனே!எங்கள் பாவங்களைஎங்களுக்கு மன்னிப்பாயாக!அல் குர்ஆன் 3:193
19/03/2026

எங்கள் இறைவனே!

எங்கள் பாவங்களை

எங்களுக்கு மன்னிப்பாயாக!

அல் குர்ஆன் 3:193

அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்.அவனே சிறந்த பாதுகாவலன்அல் குர்ஆன் 3:173
19/03/2026

அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன்.

அவனே சிறந்த பாதுகாவலன்

அல் குர்ஆன் 3:173

Address

25 Armenian Street
Chennai
600001

Alerts

Be the first to know and let us send you an email when சத்திய முழக்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to சத்திய முழக்கம்:

Share

Category