24/08/2024
பெரம்பலூர் மாவட்டம்
2024 ஆம் ஆண்டின் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுடையோர் முன்பதிவு செய்யலாம்
– மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
--------------------------------------
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கடந்த ஆண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அப்போட்டிகளுக்காக மொத்த பரிசுத்தொகை ரூ.25.00கோடி உட்பட ரூ.59.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டுப்போட்டிகள் வெகுசிறப்பாக நடத்தப்பட்டது.
இந்த ஆண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 05 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
இப்போட்டிகளில் மாநில அளவில் தனிநபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழுபோட்டிகளில் பங்கு பெற்று வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. இந்தாண்டு தனிநபர் மற்றும் குழுபோட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன் முறையாக நான்காம் இடம் பெற்றவருக்கு மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கப்படவுள்ளது.
மாண்புமிகு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 37 கோடியாக உயர்த்தி வழங்கப்படவுள்ளது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். தமிழ்நாடு முழுவதிலும் 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொது பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க 25.08.2024 அன்று முன்பதிவு செய்திட கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https:/sdat.tn.gov..in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இணையதளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்திட வேண்டும், நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. தாங்களாகவோ தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவுசெய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 74017 03516 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 05 மணிவரை 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.